'வாலி' படம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநராக அறிமுகமாகிய S.J. சூர்யா 'நியூ' திரைப்படம் மூலம் ஹீரோவானார். 'இறைவி' படத்தில் தன்னுள் இருந்த கலைஞனை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இப்போது 'மான்ஸ்டர்' மூலம் அனைவரும் கொண்டாடும் குடும்ப நாயகனாக மாறிய எஸ்.ஜே.சூர்யா, தன் அடுத்த பயணத்தை தமிழ்ச் சினிமாவின் தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராதா மோகனுடன் பயணிக்கிறார்.

சமீபகாலமாக மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் S.J.சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது S.J.சூர்யா  'உயர்ந்த மனிதன்' படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும், இவரது நடிப்பில் 'இரவாக்காலம்' மற்றும் 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளன.